அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக சட்டப்பேரவை அனைத்துக் கட்சி கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. சட்டசபையில் நிறைவேறிய நீட் விலக்கு மசோதா மீது ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காததால் அனைத்து கட்சி கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு ஆளுநர் அனுப்பாமல் வைத்துள்ளதை அடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் சட்டப்பேரவையில் அங்கம் வகிக்கும் 13 கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தை அடுத்து செய்தியாளர்களிடம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது.
நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர இன்னமும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருப்பது பேரவையின் மாண்பை சிதைப்பதாக உள்ளது.
நீட் நுழைவுத்தேர்வு பள்ளிக்கல்வியை அர்த்தமற்றதாக ஆக்குகிறது. கூட்டாட்சி தத்துவத்தை சீரழிக்கும் வகையில் உள்ள நீட் தேர்வு, வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கு சாதகமானதாக அமைந்துள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்ட ரீதியாக போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுப்பது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மூத்த சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்ட தீர்மானத்துக்கு, அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜகவை தவிர மற்ற 12 கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன,
நீட் விலக்கு குறித்து தமிழக ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோரை மீண்டும் சந்திக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற தமிழக ஆளுநரை அனைத்துக் கட்சிகள் சார்பில் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும்.
நீட் தேர்வு, மாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்பதாக உள்ளது. மாநில அரசு நிதியில் இருந்து நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை உரிமையை மத்திய அரசு பறித்து விட்டது.
நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
More Stories
பாடம் நடத்தும் அண்ணாமலை; பாடம் கற்கும் பத்திரிகை நிருபர்கள்
பெட்ரோல், டீசல் விலை: மாநில அரசு நினைத்தால் செய்ய முடியும்!
மாவட்டம்தோறும் புத்தகக் காட்சி நடத்த நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின்