குருவாயூர் கோயிலில் திருமணம் செய்வதற்கு அனுமதி
திருச்சூர்: குருவாயூர் கோயிலில் வியாழக்கிழமை முதல் திருமணம் நடத்துவதற்கு கேரள மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க வழிபாட்டு தலங்களில் மக்கள் கூடுவதை மத்திய, மாநில அரசுகள் தடை செய்திருந்தன. தற்போது நீடித்துள்ள 5-ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவில் படிப்படியாக ஒருசில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கேரள மாநில அரசு, நாளை முதல் (4 ஜூன் ) முதல் குருவாயூர் கோயிலில் ஒருசில நிபந்தனைகளுக்கு உட்பட்டு திருமணம்செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ள தகவலில், ஒரு நாளைக்கு அதிகபட்சம் 60 திருமணங்களை நடத்தலாம். காலை 5 முதல் மதியம் 12 மணி வரையில் திருமணம் நடத்திக்கொள்ளலாம். இதற்கு திருமணம் செய்து கொள்பவர்களின் புகைப்படத்துடன் கொரோனா நோய்த் தொற்று இல்லை என்பதற்கான மருத்துவ அதிகாரிகளின் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். திருமண வீட்டார் அழைத்து வரும் புகைப்படக்காரர்களுக்கு அனுமதி இல்லை. தேவஸம் பணியில் அமர்த்தியுள்ள புகைப்படக்காரர்கள் படம் எடுத்துத் தருவர். காலை 10 முதல் இரவு 7 மணி வரையில் திருமண முன்பதிவு செய்து கொள்ளலாம். மணவிழாவில் பங்கேற்போர் தனிமனித இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு விதிகளை உறுதிப்படுத்த வேண்டும் என தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
You must log in to post a comment.